india

img

மக்களின் துயரத்தை கேலி செய்யும் ம.பி. மாநில பாஜக அமைச்சர்கள்...

பெட்ரோல் விலை உயர்ந்தால் சந்தைக்கு சைக்கிளில் செல்லுங்கள்..!

போபால்:
அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கும், இலங்கையில் 59 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், இந்தியாவிலோ 100 ரூபாயைத் தாண்டி, 109 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டி விட்டது. 

இந்த கட்டுக்கடங்காத விலை உயர்வை ஏற்க முடியாது என்று,இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. பெட்ரோல் - டீசல் விலையில் சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு உள்ள கலால் வரியைகுறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.ஆனால், மோடி அரசு அதனை கேட்பதாக இல்லை.இந்நிலையில்தான், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச பாஜகஅமைச்சர் பிரதுமான் சிங் தோமர், பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன, சைக்கிளில்செல்லுங்கள் என்று பேசி யுள்ளார். “காய்கறி மார்கெட் போன்ற அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது நல்லது. அது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு சுற்றுப்புறச் சூழல் தூய்மையையும் உறுதி செய்கிறது” என்று அவர் மக்களின் வேதனையைக் கிண்டலடித்துள்ளார்.

“பெட்ரோல், டீசல் விலைஉயர்வு  மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் ஏழை - எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்குத்தான் பயன்படுத்தப் படுகிறது” என்று கூறியிருக்கும் அவர், “பெட்ரோல் - டீசல் விலை முக்கியமா, அல்லதுநாட்டின் சுகாதார சேவை சிறப்பாக இருப்பது முக்கியமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.பிரதுமான் சிங் தோமரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

                                          ****************

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் செத்துப் போய் விடுங்கள்...

பெட்ரோல் விலை அதிகம் என்று கூறுபவர்கள் சைக்கிளில் செல்லுங்கள் என்று ம.பி. பாஜக அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் கூறிய நிலையில், குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோர்கள் செத்துப் போய் விடுங்கள் என்று ம.பி.யின் மற்றொரு பாஜக அமைச்சரும் திமிராகப் பேசியுள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகின்றன. எனினும் கல்விக் கட்டண வசூலில் சமரசம் செய்யாத கல்வி நிறுவனங்கள், எப்போதும்போல கறாராக தங்களின் வசூலை நடத்திக்கொண்டிருக்கின்றன. பயிற்சிக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், நன்கொடை என்ற பெயரில் பல ஆயிரங்களை கட்டணமாக தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. அதிலும், பாஜக ஆளும்மத்தியப் பிரதேசத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரை,பெற்றோர்கள் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். பள்ளிக் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதே நிலைமை நீடித்தால், நாங்கள் செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆவேசப்பட்டுள்ளனர். தங்களின் குறைகளைக் கேட்டு அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஆனால், அனைத்தையும் கேட்டுக்கொண்ட பாஜக அமைச்சர், கல்விக் கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எதற்கு உயிரோடு இருக்கிறீர்கள்... “செத்துப் போய் விடுங்கள்” என்று ஒரே வார்த்தையில் கூறி, பொதுமக்களை அவமானப்படுத்தியுள்ளார். உடனடியாக அந்த இடத்தை விட்டும் காலிசெய்துள்ளார்.அமைச்சரின் எதிர்பாராத இந்த வார்த்தையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுமார் 80 பேர், அமைச்சரின் அலுவலகத்திற்கு முன்பாகவே போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு எழுந்துள்ளது.

 

;